குருநாகலில் நள்ளிரவு கோர விபத்து பஸ் – பிக்கப் நேருக்கு நேர் மோதி 13 வயது சிறுமி பரிதாப மரணம்!
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் கொக்கரல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச்சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பிக்கப் ரக வாகனமும், எதிரே வந்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது பிக்கப் ரக வாகனத்தில் பயணித்த 13 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், அந்தச் சிறுமியின் தாயார் மற்றும் மாமா ஆகிய இருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
