மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை! – காணித் தகராறால் நேர்ந்த விபரீதம்.

குருநாகல், வாரியப்பொலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற காணி விவகாரம் காரணமாக, குடும்பஸ்தர் ஒருவர் இன்று கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ஒன்று இன்று வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது ஏற்பட்ட மோதலில், அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான 28 வயதுடைய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். நீண்டகாலப் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.