நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபா முடக்கம்! – மக்களுக்குப் பாதிப்பில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி.

“தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை விடவும் அதிகளவான தொகையை விநியோகஸ்தருக்கு வழங்காமல் அரசு தடுத்து வைத்துள்ளதால், பொதுமக்களுக்கோ அல்லது அரசுக்கோ எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது” என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, குறித்த விநியோகஸ்தருக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 9.15 பில்லியன் ரூபா கொடுப்பனவை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தொகையானது மதிப்பிடப்பட்ட நட்டமான 8 பில்லியன் ரூபாவை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைவாக இருந்ததால் சக்தி உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இந்த நட்டத்தை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க மாட்டோம் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.

தரம் குறைந்த மூன்று நிலக்கரி கப்பல்களுக்கான 5 பில்லியன் ரூபா கொடுப்பனவு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நிறுவனத்திடம் இருந்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4.5 பில்லியன் ரூபா) பெறுமதியான செயலாற்றுகைப் பிணைப்பணமும் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளின்படி தரம் குறைந்த நிலக்கரியைத் திருப்பி அனுப்ப முடியாது என்பதால், நிதி ரீதியான தண்டனைகள் மூலமே நட்டத்தை ஈடுசெய்ய முடியும். எனவே, இந்த விவகாரத்தில் ஏற்படும் முழுமையான நட்டத்தையும் விநியோகஸ்தரே ஏற்க வேண்டும். இதில் அரசுக்கோ அல்லது வரி செலுத்தும் மக்களுக்கோ எவ்வித சுமையும் இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.