மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்! – அரசிடம் சிறீதரன் எம்.பி. வேண்டுகோள்; நீலகாமம் வன்முறைக்கும் கடும் கண்டனம்.

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை – நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மலையக மக்களுக்கு உடனடியாக நில உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நீலகாமம் தோட்டத்தில் கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் தொழிலாளி ஒருவரின் குடியிருப்பு ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இக்கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.

மலையக மக்களின் தற்போதைய அவலநிலை குறித்துப் பேசிய அவர், 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மக்களுக்கு இன்றும் சொந்த நிலம் இல்லை என்பதை இந்தச் சம்பவம் உலகுக்குக் காட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

“ஒரு சிறு நிலத்தில் குடிசையொன்றை அமைப்பதற்குக் கூட மலையக மக்களுக்கு உரிமை இல்லை என்பது வேதனையானது.

மனித முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிப் பேசும் இந்த அரசு, அந்த மக்கள் தமக்கென ஒரு சொந்த நிலத்தைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்குரிய வழியை இந்தத் தடவையாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நீலகாமம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும். மலையக நில உரிமை விவகாரத்தில் அரசு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றும் சிறீதரன் எம்.பி. இதன்போது உரத்த குரலில் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.