செம்மணி அகழ்வு: மயான எரிதகன மேடையை உடைத்து மனித என்புகளை மீட்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அடியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதியை அகழ்ந்து எடுப்பதற்கு, குறித்த மேடையை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின்னரே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்குக் கீழாக அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதி இதுவரை இலக்கமிடப்படவில்லை. பொதுவாக, ஒரு மனித என்புத் தொகுதி முழுமையாக அடையாளம் காணப்பட்டு, மண்டையோடு முதல் பாதம் வரை சுத்தப்படுத்தப்பட்டு வரைபடம் வரையப்பட்ட பின்னரே அதற்கு இலக்கமிடப்படும்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதியின் மண்டையோடு மாத்திரம் அத்திவாரத்துக்கு வெளியேயும், ஏனைய பகுதிகள் அத்திவாரத்துக்கு உள்ளேயும் காணப்படுகின்றன.

எனவே, ஏனைய பகுதிகளில் உள்ள என்புத் தொகுதிகளை அகழ்ந்து எடுத்த பின்னர், இந்தத் தகன மேடையை உடைத்தே குறித்த என்புத் தொகுதியை முழுமையாக மீட்க வேண்டியுள்ளது.

இது தொடர்பான சட்ட ரீதியான அனுமதிகளைப் பெற்ற பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட இந்த மனித என்புத் தொகுதியானது, செம்மணி புதைகுழி விவகாரத்தில் மிக முக்கியமான ஒரு தடயமாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.