சுரேஷ் சலேவின் ரிட் மனு ஜூலை 17 இற்கு ஒத்திவைப்பு.

https://we.tl/t-ZjhCnM1XvJMbDOQe

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான விசாரணை மற்றும் அதற்கு ஆதரவாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால மனுக்களை ஜூலை 17 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட தரப்பினர், சுரேஷ் சலேவின் ரிட் மனுவுக்கு ஆதரவு தெரிவித்துத் தங்களை வழக்கின் இடைக்கால மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.

இந்த வழக்கு பொதுமக்களின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ள விடயம் என்பதால், இதில் தலையிட்டுத் தங்களது கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு இடைக்கால மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் வி.கே.சொக்ஸி, மனோஹர டி சில்வா, கிரிஷ்மால் வர்ணசூரிய மற்றும் சட்டத்தரணி அசோக் பரன் ஆகியோர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிப்பது, முதலாவது ரிட் மனு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய, மனுதாரர் சுரேஷ் சலே சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பிப்புகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, இந்த இடைக்காலக் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் எனத் தெரிவித்தார்.

அதற்கமைய, இந்த விடயங்களை ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.