சொந்த மண்ணை மீட்கக் கோரி வலி. வடக்கு மக்கள் 12 ஆவது வாரமாக தொடர் போராட்டம்.

https://we.tl/t-3JkfuB0ZeOjhZsos

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி, மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில், அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். குறித்த பகுதிகள் இன்றும் உயர் பாதுகாப்பு வலயங்களாகவே தொடர்ந்து வருகின்றன.

சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணிகள் விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அவர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போராட்டத்தின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா மற்றும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் வாழிடங்களையும் மீட்டுத் தருமாறு கோரி, உரிமையாளர்கள் தமது கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.