தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் அதிரடிச் சோதனை! – காலாவதியான மருத்துவப் பொருள்கள் மீட்பு.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் கடந்த சில நாள்களாக இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது மொத்தம் 52 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சோதனையின் போது பல நிறுவனங்களில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காலாவதியான மருத்துவப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டிலுள்ள பொருள்களுடன் காலாவதியான பொருள்களைச் சேர்த்து களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைக்குத் தகுதியற்ற தரக்குறைவான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் பெட்டிகள், டெங்கு நோயைக் கண்டறியும் பரிசோதனைப் பெட்டிகள், இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் வகைகள், பல்வேறு ஆய்வக இரசாயனங்கள், சாயக் கரைசல்கள் மற்றும் மருத்துவ ஆய்வகப் பொருட்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் சிக்கியுள்ளன.

மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.

நுகர்வோரின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களுக்கு எந்தவொரு விட்டுக்கொடுப்பும் காட்டப்படமாட்டாது எனவும், எதிர்காலத்திலும் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.