தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தில்லியில் உள்ள காவிரிநீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

இதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கான காவிரிநீர் திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் அதிகாரிகள் கூறியதாவது, கர்நாடகத்தில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், அணைகளில் தண்ணீர் வரத்தும் இல்லை.

ஜூலை மாதத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால், அணையில் குறைந்தளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.

மேலும், பருவமழை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை; அணைகளிலும் நீர் சேமித்து வைக்கப்படவில்லை. கர்நாடகம் இதற்கு முன்பு காணாத மழைப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.

காவிரி படுகைகளில் கடுமையான பற்றாக்குறை நிலவி வருவதால், தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது என்று தெரிவித்தனர்.

இதனிடையே, காவிரி நீரைத் திறக்க வலியுறுத்தி கர்நாடக மாநில எல்லையை நோக்கி பேரணியில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமையில் (ஜூலை 15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.