அரசு மீதான மக்கள் நம்பிக்கை சிறிதளவும் குறையவே இல்லை! – மாறாக பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பேருவளைக் கூட்டத்தில் ரில்வின் தெரிவிப்பு.

தற்போதைய அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை என்றும், மாறாகத் தேர்தல் காலத்தை விட தற்போது மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், ‘நமது அரசு: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை – பேருவளை பிரதேசத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசின் மக்கள் ஆணை குறைந்துவிட்டது என்றும், ஆதரவு குறைந்துவிட்டது என்றும், மக்கள் அரசின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறான கருத்துக்களுக்கும் பொய்ப் பிரச்சாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் திரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை நேரில் வந்து இன்று பார்வையிடுங்கள். இதுவே மக்களின் உண்மையான பலமாகும். அரசின் மீதான நம்பிக்கை ஒரு சிறு துளியளவும் குறையவில்லை.

இதுவரை இலங்கையில் ஆட்சி அமைத்த எந்தவொரு கட்சியும் வடக்கையும் மலையகத்தையும் முழுமையாக அரவணைத்துத் தாமே நேரடியாக ஆட்சி அமைத்ததில்லை. இதற்கு முன்னர் ஆட்சியமைத்தவர்கள் உடைந்த கட்சிகளுக்கும், வடக்கிலும் மலையகத்திலும் உள்ள வேறு கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கியே ஆட்சியைக் கைப்பற்றினர்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 ஐக் கைப்பற்றி, வரலாற்றில் முதல்முறையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சகல வாக்குகளுடன் இந்த மக்கள் அரசை உருவாக்கியுள்ளது. தேர்தல் காலத்தை விடவும் தற்போது மக்களது ஆதரவும் நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்களுக்கான, அழகான நாட்டை உருவாக்குவதை நோக்கி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.