நீதிச் சுதந்திரத்தை அழித்தவர்களோடு சேர்ந்து நீதித்துறைச் சுதந்திரத்துக்காகப் போராடுவதா? – போராட்ட முன்னணியின் கூட்டு அறிவிப்பில் ஒப்பமிட சுமந்திரன் மறுப்பு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபித்து, மக்களைத் திரட்டி எதிர்ப்பை காட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு ஜானகி ஹோட்டலில் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆராய்ந்த பின்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுஜ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றினார். 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தாமும் தமது கட்சியினரும் முழுமையாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். ஆயினும் அந்தக் கூட்ட அறிக்கையில் கையெழுத்திட அவர் மறுத்து விட்டார்.

ஏற்கனவே இலங்கையின் நீதித்துறையில் மோசமான முறையில் தலையீடு செய்து அதன் சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புக்கள் அந்தக் கூட்டறிக்கையில் ஒப்பமிடுகின்றன என்றும், அவற்றுடன் சேர்ந்து நீதிச் சுதந்திரத்தை காப்பாற்ற போராடுவது என்ற பெயரில் நடிப்பதற்குத் தான் தயார் இல்லை என்றும் அவர் கூறினார்.

முன்னர் பிரதம நீதியரசர்களாக இருந்த நெவில் சமரக்கோனையும், ஷிராணி பண்டாரநாயக்காவையும் பதவியிலிருந்து முறையற்ற விதத்தில் அகற்றியமை மூலம் நீதித்துறை சுதந்திரத்தில் மோசமாக தலையிட்ட தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்தை பேணுதல் என்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றார் அவர். அத்தகைய தரப்புகளோடு சேர்ந்து இந்த விடயத்தில் கூட்டறிக்கையில் ஒப்பமிடுவது குறித்து தமது கட்சியின் அனுமதியைத் தான் பெற வேண்டி இருக்கும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.

”22 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பை காட்டுகின்றோம். நாடாளுமன்றத்திலும் அதனை வெளிப்படுத்தி வாக்களிப்பிலும் காட்டுவோம். ஆனால் அதற்காக நீதித்துறையில் மோசமான முறையில் தலையிட்டு, அதன் சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்திற்காகப் போராடுகின்றோம் என்று பாவனை பண்ண நாங்கள் தயார் இல்லை” – என்றார் சுமந்திரன்.

வரும் 24ஆம் திகதி கொழும்பில் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் போராட்டத்துக்குக் கட்சி பேதமின்றி ஆதரவு திரட்டும் விதத்தில் நேற்று மாலை இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கின் பிற தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.