வடக்கில் நினைவேந்தல் சுதந்திரம்; தெற்கில் முப்படைகளுக்கு நெருக்கடி – இப்படி விமல் தாக்கு.
வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகின்றது என்றும், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும் சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த சிங்களவர்களையே தற்போதைய அரசு நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, இறையாண்மையைப் பாதுகாத்த முப்படையின் தளபதிகளும் அவர்களின் குடும்பத்தாரும், அத்துடன் முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரும் இன்று அரசால் திட்டமிட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும் எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். வடக்கில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வும் அரச அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், இந்தப் பகுதிகளில் சிங்களவர்களின் உரிமைகள் திட்டமிட்ட முறையில் மறுக்கப்படுவதுடன், சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் இத்தகைய செயற்பாடுகளுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.” – என்றார்.
