இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களிடம் சி.ஐ.டி., ரி.ஐ.டி. விசாரணை! – அமைச்சர் சரத் வீரசேகர தகவல்.

“சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 24 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.), பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ரி.ஐ.டி.) என்பன விசாரணைகளை நடத்தும். அதன் பின்னரே அவர்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

குடிவரவு – குடியகல்வுச் சட்டத்தை மீறி 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனிலிருந்து 20 பேரும், சுவிட்சர்லாந்தில் இருந்து 4 பேரும் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் இராணுவத்தின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.