மட்டக்களப்பில் காணாமல்போன ஆணொருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

ஆரையம்பதியைச் சேர்ந்த 57 வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களாகக் குறித்த நபர் காணாமல்போயிருந்த நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதன்போது திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் காணாமல்போனவரது பாதணி இருப்பதைக் கண்டு குளப்பகுதியில் தேடிய போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வலிப்பு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரியின் உத்தரவுக்கமைய காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தைப் பார்வையிட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.