வியட்நாமில் உயிர்மாய்த்த கிரிதரனின் சடலம் சாவகச்சேரியில்நல்லடக்கம்! – உறவுகள் திரண்டு கதறல்.

வியட்நாமில் உயிரை மாய்த்துக்கொண்ட யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்வில் உறவுகள் திரண்டு கதறியழுதனர்.

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்திருந்தனர்.

அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்ட நாட்களின் பின்னர் இலங்கைக்குக் கடந்த சனிக்கிழமை சடலம் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.