காணாமல்போன மீனவர் மாதகலில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம், பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல்போன மீனவர், மாதகலில் இன்று சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.

பலாலி, அன்ரனிபுரம் பகுதியைச் சேர்ந்த இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்ற வேளை காணாமல்போயிருந்தார்.

காணாமல்போனவரை மறுநாள் திங்கட்கிழமை சக மீனவர்கள் தேடிச் சென்ற சமயம், அவரின் படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது. தேடிச் சென்றவர்கள் குறித்த படகை மீட்டு கரை சேர்த்தனர்.

இந்நிலையில், காணாமல்போன மீனவரின் சடலம் இன்று காலை மாதகல் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இது குறித்து இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.