போலித் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒதுக்குங்கள்! – சைக்கிளுக்கு வாக்களிக்க கஜேந்திரகுமார் கோரிக்கை.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, ஸ்ரீலங்கா அரசின் கூலிகள், போலித் தமிழ்த் தேசியவாதிகள் ஆகியோரை இனங்கண்டு, ஒதுக்கி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” – என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“அரசு எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளைத் தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க அரசு முற்படலாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசு அமைய வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி சபைத் தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாகக் கருத வேண்டும்.

ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள், அரசமைப்பின் 13 ஆவது திருத்ததை ஏற்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியவர்கள், வாக்குப் பெறுவதற்காக தற்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, ஸ்ரீலங்கா அரசின் கூலிகள், போலித் தமிழ்த் தேசியவாதிகள் ஆகியோரை இனங்கண்டு ஒதுக்கி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.