கோட்டாவைப் போல் விரைவில் ஓடுவார் ரணில்! – எதிரணி ஆரூடம்.

“கோட்டாபய ராஜபக்சவைப் போல் மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே, கோட்டாவைப் போல் ரணிலும் விரைவில் பதவி துறந்து ஓடுவார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதேச சபை உறுப்பினராக ஆவதற்குக்கூட முடியாமல் இருந்தவர். நாட்டைச் சீரழித்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அப்படிப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

ரணிலைச் சிறைக்கு அனுப்பும் வரை நித்திரைகொள்ளமாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று ரணில்தான் சரியான தலைவர் என்கின்றார்கள். அவர்கள்தான் ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

மஹிந்த – கோட்டா ஆகியோர் பதவிகளைத் துறந்து ஓடி ஒளிந்துகொண்டபோது அவர்களுடன் சேர்ந்து ஒளிந்துகொண்ட ‘மொட்டு’க் கட்சி எம்.பிக்கள் வீதிக்கு இறங்குவதற்கு வழியமைத்துக் கொடுத்தவர் இந்த ரணில். அதனால்தான் அவரைப் புகழ்ந்து பேசுகின்றார்கள் இவர்கள்.

அவர் மக்களின் போராட்டங்களை, பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது விருப்பத்தின்படி மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார். கோட்டாவைப் போல்தான் ரணிலின் ஆட்சியும் இருக்கின்றது. எனவே, கோட்டாவைப் போல் ரணிலும் விரைவில் பதவி துறந்து ஓடுவார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.