“இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் நான் தான் வெற்றி பெறுவேன்” ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று தொடங்கியது. இன்று ஓபிஎஸ் தரப்பினர் தங்களது வாதங்களை நீதிபதி முன்வைத்தனர்.

அப்போது வாதிட்ட ஓபிஎஸ் தரப்பினர், “ அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றப்பட்டு விட்டது. எம்.ஜி.ஆர் சில அடிப்படை விதிகளை மாற்றியமைக்க கூடாது என எண்ணினார். அதை அனைத்தையும் இபிஎஸ் தரப்பினர் அவசரகதியில் மாற்றிவிட்டனர். ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளது என வாதிட்டனர். இன்று தேர்தல் நடைபெற்றாலும் ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார்” என தெரிவித்தார்.

3 நாட்களாக ஓபிஎஸ் தரப்பு வாதங்களே கேட்கப்பட்ட நிலையில் இன்றுடன் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேரம் எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்த காரணத்தினால் ஜனவரி 10 அன்றும் தீர்ப்பு அளிக்கப்படாது என தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.