அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம்! – பிரசாரக் கூட்டத்தில் சஜித் சபதம்.

“ராஜபக்சவின் அடிமைத்தனத்தை இன்னமும் உறுதிப்படுத்தும் ‘மொட்டு’ – ‘யானை’ அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான முதல் நடவடிக்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்படும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாணந்துறையில் நேற்று (04) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசு தவறான கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றது. இவர்களின் இத்தகைய செயற்பாடுகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

ராஜபக்ச குடும்பம் இந்நாட்டை அழித்து வறிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. சிறு குழந்தை முதல் முதியவர் வரை, அரச ஊழியர் முதல் கூலித் தொழிலாளி வரை அனைவரினதும் இயல்பு வாழ்க்கை வீழ்ந்துள்ளது.

இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் இனி எந்த ஆட்சியாளருக்கும், தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமைகள் அல்ல.

உலகில் எந்த நாடும் பொருளாதாரத்தைச் சுருக்கி பிரச்சினைகளைத் தீர்த்ததாக இல்லை. தற்போதைய அரசு பொருளாதாரத்தைச் சுருக்கி நாட்டு மக்களை அழிக்க முயல்கின்றது. தேவையைக் குறைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். அது தவறு. இந்தப் பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்குப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே ஒரே தீர்வு.

2019 இல் ஒரு தவறு செய்யப்பட்டது. 2023 இல் மக்கள் மற்றொருவருக்குப் பின்னால் ஓடுகின்றனர். இந்நாட்களில் பொய் சொல்லி தம்பட்டம் அடிக்கும் ஆட்சியாளர்களுக்குச் சர்வதேச ஆதரவு கிடைக்காது.

எமது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் திறன் வேண்டும்.

வடகொரியா, கியூபா போன்ற சோசலிச நாடுகள் எமது நாட்டைக் கட்டியெழுப்ப உதவாது என்பதால் இதுபோன்ற சோசலிவாதிகளின் பின்னால் செல்ல வேண்டாம்.

இவ்வாறான சோசலிசவாதிகளின் பின்னால் சென்றால் நாடு தற்போதைய நிலையில் இருந்து மேலும் வீழ்ச்சியடையும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.