உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது? – பெப். 23 இற்குப் பின்பே இறுதி.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பணம் வழங்குவதில் உள்ள தடை தொடர்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார் என்று அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்க அரசு எடுத்த நிர்வாக தீர்மானம் குறித்து திறைசேரி செயலாளர் தேர்தல்கள் ஆணையகத்துக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட திகதிகளில் அஞ்சல் மூல வாக்குகளை ஆணைக்குழுவுக்கு வழங்காத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, திறைசேரிக்கு நிதி வழங்க முடியாவிட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என்று அரச அச்சக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.