சீன அதிபரை சந்திக்க ஜெலன்ஸ்கி முடிவு.

கிவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. ஆனாலும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது.

அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு வருகின்றனர். இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபையிலும் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தி இருந்தார்.

இதை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சீன அதிபரை சந்திக்க முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு மட்டுமே எந்தவொரு அமைதி முயற்சியையும் தொடங்க முடியும். நான் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.

இது உலக பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும். ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்காது என நான் நம்புகிறேன். மூன்றாம் உலகப்போரின் அபாயத்தை தவிர்ப்பதற்காக ரஷியாவுக்கு சீனா ஆயுத வினியோகத்தை தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.