கொழும்பில் சஜித்தைத் திடீரெனச் சந்தித்த பார்த்தசாரதி!

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும் ஊடகவியலாளரும் புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் இங்கு நினைவு கூர்ந்தார்.

சைப்ரஸ், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராகக் கோபால்சுவாமி பார்த்தசாரதி கடமையாற்றிருந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வத் தொடர்பாளராக இருந்ததோடு, அவரின் ஊடகப் பேச்சாளராகவும் கோபால்சுவாமி பார்த்தசாரதி பணியாற்றியவராவார்.

அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்குப் பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும்,இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பனிப்பாளராகவும் அவர் கடமையாற்றி வருகின்றார்.

கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.