நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எனது பதவியைக் கவிழ்க்க முடியாது! – பிரதமர் கருத்து.

“பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு எந்த அரச அதிகாரியையும் நான் தூண்டவில்லை. எதிரணியினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை அடியோடு நிராகரிக்கின்றேன்.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட அதிகாரிகளைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரதமர் தினேஷுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் எதிரணிகள் ஆலோசித்து வருவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எனக்கு எதிராக எந்தத் தரப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன். பெரும்பான்மை இல்லாத நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எனது பிரதமர் பதவியையோ அல்லது அமைச்சுப் பதவியையோ கவிழ்க்க முடியாது.

உள்ளூராட்சிசபைத் தேர்தலைக் குழப்புவதோ – தேர்தலைப் பிற்போடுவதோ எனது நோக்கம் அல்ல. தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும்.

நாட்டின் நிலைமை குறித்தும், மக்களின் நிலை தொடர்பிலும் அக்கறை இல்லாதவர்கள் வாய்க்கு வந்த மாதிரி உளறுவார்கள். அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.