ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போல் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்!

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தினார்.

இரா.சாணக்கியன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்துள்ளது.

வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரணையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்துள்ளனர்.

நாடாளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு எவ்வாறான பாடங்களைக் கற்றுகொள்ள முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை அரசியல் பிரமுகர்களையும், அரசியலில் ஈடுபட்டுள்ள தரப்பினரையும் இங்கு வந்து சந்தித்த ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரை (Kenneth J Gipson) சாணக்கியன் எம்.பி. தனியாகச் சந்தித்து இதன்போது பேசினார்.

கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையில் இருந்தது போன்றதொரு நிலைமையையே தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் என்று சாணக்கியன் எம்.பி. இதன்போது தெரிவித்தார்.

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளதாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது தமிழ்த் தரப்பினரை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் சாணக்கியனிடம் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.