உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது? – பிரதமரிடம் சஜித் கேள்வி.

“வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது?”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது அரசின் பொறுப்பாகும். ஒரு நாள் அரச செலவினத்தைத் தேர்தலுக்குப் பயன்படுத்தினால் பணம் விரயமாகாது.

குறித்த நிதியை வழங்காதது சிறப்புரிமை மீறலாகும். உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவைக் கூட வழங்கியுள்ளது. இதற்கேற்பச் செயற்படாதது ஜனநாயக விரோத செயலாகும்.

நிதியை வழங்கியவுடன் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரச அச்சகம் கூட்டுத்தாபனம் தயாராக இருக்கும் போது, உரிய நிதியை விடுவிக்காததற்குக் காரணம் என்ன?” – பிரதமரிடம் வினவினார் எதிர்க்கட்சித் தலைவர்.

Leave A Reply

Your email address will not be published.