வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஏகமனதாகத் தெரிவு.

பாராளுமன்றத்தில் 23.03.2023ஆம் திகதி நடைபெற்ற வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சம்பிக்க ரணவக்க ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண இவருடைய பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன வழிமொழிந்தார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும்வகையில் அரசாங்கத்தின் மேலதிக வருவாயைத் திரட்டுவதற்கும், அரசாங்கத்தின் செலவீனங்களைக் கருத்தில் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கான அதிகாரங்கள் பல இந்தக் குழுவுக்கு காணப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும், அரசாங்கத்தின் வருமானங்களை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்த விடயங்களை எதிர்காலத்தில் குழுவில் விரிவாக ஆராய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு போன்ற சகல நிலையியற் குழுக்களின் விடயதானங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படாத வகையில் குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து இந்தக் குழுக்களின் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பது அவசியம் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் அனைத்துக் குழுக்களின் தலைவர்களும் சபாநாயகரைச் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகத் தலைவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சஷீந்ர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எச்.எம்.எம்.முஷாரப், கௌரவ இஷாக் ரஹ்மான், கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாளக பண்டார கோட்டேகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.