தேர்தலுக்கு அஞ்சும் ஆட்சியாளர்கள் நாட்டை எப்படிக் கட்டியெழுப்புவார்கள்? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி.

“நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச தரப்பினர் தேர்தலை நடத்தினால் தாம் படுதோல்வி அடைவோம் என்று தெரிந்தே தேர்தலை ஒத்திவைத்திக் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கோழைத்தனமான அரச தரப்பினர், முதுகெலும்பில்லாத தலைமையினர், தேர்தலுக்கு முகம் கொடுக்க அஞ்சும் அணியினர் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றார்கள்?”

இவ்வாறு கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

பொரளை குப்பியவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் தலைமையிலான யானை – காகம் – மொட்டு அரச தரப்பினர் தேர்தலை நடத்தாதிருப்பதற்குப் பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை வழங்காமல், நீதிபதிகளை விமர்சனம் செய்தும், அவர்களைக் குறைமதிப்புச் செய்தும் மிரட்ட முயற்சிக்கின்றனர்.

நாட்டு மக்கள் பட்டினியால் வீதியில் இறங்கும் போது அரச மிருகத்தனத்தையும் பயங்கரவாதத்தையும் பிரயோகிப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த ஏகாதிபத்தியத்தைப் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இந்தச் சர்வாதிகார அரச பயங்கரவாதத்தை தோற்கடிக்க வீதியில் இறங்கி ஜனநாயக ரீதியிலான அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.