ஜனாதிபதி ரணிலுக்கு எதிராகக் குற்றவியல் பிரேரணை வரும்! – டலஸ் மிரட்டல்.

“தேர்தலை ஒத்திப்போடல் என்பது முழுமையான அரசமைப்பு மீறல். இந்தக் காரணத்தை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர முடியும்.”

இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது. சட்டம் – அரசமைப்பு – ஜனநாயகம் – சம்பிரதாயம் இப்படி எந்த விடயத்தையும் பார்ப்பதாக அரசு இல்லை

20 தடவைகள் இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவே தெரிவித்துள்ளது.

தேர்தலை ஒத்திப்போடுவதற்குத் தேர்தல் என்ற ஒன்று இல்லையே என்று கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 82 ஆயிரத்து 800 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் செலுத்தியுள்ள கட்டுப்பணம் மாத்திரம் 186 மில்லியன் ரூபா. இப்படி இருக்கும்போது தேர்தல் என்ற ஒன்று இல்லை என்கின்றார் ஜனாதிபதி.

தேர்தலை நடத்துவதற்குப் பணப்பிரச்சினை இங்கில்லை. அதிக பணம் செலவழித்து பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றது அரசு. பெரஹெரா – சுதந்திர தின நிகழ்வு போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழிக்கப்பட்டது. அமைச்சரவையும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கெல்லாம் பணம் உண்டு. தேர்தலை நடத்துவதற்கு மாத்திரம்தான் பணம் இல்லை என்று அரசு கூறுகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.