மொட்டுவின் வியூகங்களை எந்தக் கட்சியாலும் முறியடிக்க முடியாது! – பஸில் கூறுகின்றார்.

“அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடைந்து ஆட்சியமைக்கும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என்றும், அவர்களின் அந்த முயற்சி பயனற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் எதிரணிப் பக்கம் சென்றாலும் நாடாளுமன்றத்தில் தற்போது மொட்டுக் கட்சி பெரும்பான்மையை இழக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் மொட்டுக் கட்சியே வெற்றிவாகை சூடும் என்றும் அவர் அடித்துக் கூறினார்.

மொட்டுக் கட்சியின் வியூகங்களை எந்தக் கட்சியாலும் முறியடிக்க முடியாது என்றும் பஸில் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்படி விடயங்களைக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.