ஜனாதிபதியிடம் தேர்தலுக்குப் பணம் கோரி அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எதுவுமில்லை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்குகி கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, தேர்தலுக்குத் தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.