கர்நாடகாவில் மாபெரும் பிரம்மாண்ட சாலை பேரணியை தொடங்கிய பிரதமர் மோடி

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரபரப்புரை சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக முன்னின்று சூறாவளி பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் முக்கிய பகுதியாக அவர் இன்று கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பிரம்மாண்ட சாலை பேரணி மேற்கொள்கிறார். சுமார் 26 கிமீ தூரம் கொண்ட இந்த சாலை பேரணி இன்றும் நாளையும் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

இன்று காலை பெங்களூருவின் ஜேபி நகர் பகுதியில் இருந்து கார் மூலமான தனது பிரம்மாண்ட சாலை பேரணியை தொடங்கினார். வழிநெடுகிலும் பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் மலர் தூவி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு தந்தனர். சாலையில் இரு புறமும் திராளாக இருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து பிரதமர் உற்சாகப்படுத்தினார்.

பிரதமருடன் பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு மத்திய தொகுதி எம்பி பிசி மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். முதல் கட்ட பேரணி சுமார் 3.30 மணிநேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பயணம் செய்யும் சுமார் 26 கிமீ பேரணியில் 18 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த பேரணியில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.