விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் ஆட்டம் கண்டுள்ள பல்கலைக்கழகக் கல்வித்துறை.

இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் அவர்கள் வழமையை விட அதிகமாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர் எனவும், இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களை விட கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சடுதியாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர் எனவும், அரசு உடனடியாகத் தலையிட்டு வெளிப்படையாகக் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாலும், அரச சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்துக்கொள்ளாத அரசின் முடிவினாலும் பல்கலைக்கழகக் கல்வித்துறை பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது.

சில பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு முறையால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுமார் 36 வீத வரிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனால், அவர்கள் சம்பளத்திற்கு ஏற்றவாறு செலவுகளை நிர்வகித்தாலும், இந்த நியாயமற்ற வரிக் கொள்கையால், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்பு செலுத்திய வரித் தொகையைவிட மூன்று மடங்கு அதிகம் சுமையை எதிர்கொள்கின்றனர்.

இதன்படி, சில விரிவுரையாளர்களின் சம்பளம் மறை நிலைக்குச் சென்றுள்ளது எனவும், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.