தமிழ் அரசின் எம்.பிக்களுடன் மே 9 ஜனாதிபதி பேச்சு! – வடக்கு எம்.பிக்களுடன் மே 11,12,13 சந்திப்பு.

வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 11, 12, 13 ஆகிய மூன்று தினங்களும் பேச்சு நடத்துவதற்கு முன்னதாக மே 9 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்றுச் சென்று அவருடன் பேசுவதற்கு முன்னதாக, அது குறித்து ஆராய்வதற்குத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மே 8 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு வீட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பில் இந்தக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் மே 11, 12, 13 பேச வருமாறு வடக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அது தொடர்பான அழைப்புக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அழைப்பை ஏற்று அதில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய தினம் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் கூட்டான ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.