வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர்களை மீளவும் இணைக்கும் சுற்றறிக்கை திங்கள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீளவும் சேவையில் இணைக்கக் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, அவர்கள் போட்டியிடவுள்ள தேர்தல் தொகுதியில் உள்ள அரச அல்லது பகுதி நிலை அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அந்தத் தொகுதிக்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்தநிலையில், அது தொடர்பான சுற்றறிக்கை நாளைமறுதினம் வெளியிடப்படவுள்ளதுடன், இதனூடாக, அவர்களுக்கான வேதனம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனாக்க வக்கும்புர மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.