வெடுக்குநாறிமலை பூசாரியார் உள்ளிட்ட இருவர் இன்று கைது!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் என இருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன் நேற்று சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது. அதில் மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, விசாரணை ஒன்றுக்காக ஆலய நிர்வாகத்தினரைப் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு நெடுங்கேணிப் பொலிஸாரால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்று காலை நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றனர். அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். .

கைது செய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.