கலவரத்தால் மணிப்பூரில் அத்தியவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்வு…!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் அங்கு அத்தியவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் ‘மெய்தி’ இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு கேட்பதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இது இருதரப்பினரிடையே கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, கலவரத்தை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அத்தியாவசிய பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தாக்குதல் பயத்தால் அத்தியவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் அங்கு செல்லவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170 ஆகவும், கள்ளச் சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800 ஆகவும் விற்கப்படுகிறது. அரிசி மூட்டை விலை, ரூ.900-ல் இருந்து ரூ.1,800 ஆக உயர்ந்து விட்டது. உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து விட்டது.

30 முட்டைகள் கொண்ட அட்டை பெட்டி, ரூ.180-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இப்பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு பாதுகாப்பு படையினர் காவலாக சென்று வருகிறார்கள். இல்லாவிட்டால், இப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும் ஆடு, கோழிகள் கிடைப்பதால் இறைச்சி விலை மட்டும் உயரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.