இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து சாவு.

மலேசியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குருநாகல் – கொபேகனே, அரலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி, மாலபேயில் வசிக்கும் தனது நண்பர் ஒருவரின் ஊடாக சுற்றுலா விசாவில் இப்பெண் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 23ஆம் திகதி, வீட்டில் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார் எனவும், வேறு இடத்தில் தற்போது பணியில் இணைந்துள்ளார் எனவும் கணவரிடம் அப்பெண் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவர் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் இரண்டாவது மாடியின் ஜன்னலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று நேற்றிரவு வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் சிங்கப்பூரில் இலங்கைப் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

புத்தளம் – மொடமுல்ல, உலவெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், தான் வேலை செய்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக முன்னதாகத் தெரிவித்திருந்தார் என்று வீட்டார் கூறியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.