கனேடிய விசா பெற்றுக் கொடுப்பதாக 60 கோடி ரூபாயை கொள்ளையடித்த இருவருக்கு விளக்கமறியல்

கனடாவில் உள்ள கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒரு பெண் மற்றும் ஒரு நபரை , ஜூன் 5ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (24) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதவான், இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

 

நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த நிஷாமுதீன் மொஹமட் மொஹிதீன் நின்ஸர் மற்றும் கடுவெல ஹொரணதொட்டை, குலதுங்க கங்கனம்ல பிரதேசத்தை சேர்ந்த துஷாரிகா நெரஞ்சலி ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய மோசடி விசாரணைப் பிரிவினர், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபரான பெண்ணும் குறித்த நபரும் இந்தப் பணத்தை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த ஏழு முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன், கோட்டை பொலிஸாரிடமிருந்து 19 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் , இரத்தினபுரி உட்பட பல பகுதிகளில் இருந்து 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

நுகேகொடையை வசிப்பிடமாகவும், கொழும்பில் உள்ள உலக வர்த்தக நிலையத்தில் அலுவலகம் நடத்தி வரும் சந்தேகநபர் , சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு பெரும் தொகையானவர்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணத்தை அபகரித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.