நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு.

தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு

தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தீ விபத்துக்கு உள்ளாகியது.

இதனையடுத்து தீயை அணைக்க முன்னெடுக்கப்பட்ட பல கட்ட முயற்சிகளுக்கு அமைவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள பரப்பில், கடும் காற்று வீசுவதாலும் கப்பலின் உட்பாகத்தில் காணப்படும் அதிக வெப்பத்தினாலும் மீண்டும் திங்கட்கிழமை இரவு முதல் தீ பரவ ஆரம்பித்தது.

இந்த தீ பரவலை கட்டுப்படுத்த திங்கட்கிழமை முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அதிகாலை தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கடற்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.