யாழில் வீதி விபத்துக்களைத் தடுக்க நாளை முதல் விசேட வேலைத்திட்டம் – களமிறங்குகின்றது பொலிஸ்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீதி விபத்துக்களைத் தடுக்க நாளை புதன்கிழமை முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மாவட்டத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் வீதி விபத்துக்களில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதனால் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காங்கேசன்துறை வீதி, வைத்தியசாலை வீதி, ஸ்ரான்லி வீதி ஆகிய வீதிகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துதல் அதிகரித்துள்ளன.

அதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அதற்கமைய நாளை புதன்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக அனைத்து பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினரும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர்.

எனவே பொதுமக்கள், சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து வீதி விபத்துக்களில் இருந்து தங்களையும், வீதியில் செல்வோர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.