யாழின் அவலநிலை! – தரம் 9 இல் எழுத, வாசிக்கத் தெரியாத மாணவர்கள்.

“யாழ்ப்பாணத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இப்படியான மோசமான நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது” – என்று பிரதேச செயலர்கள் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்கள்.

பாடசாலை இடைவிலகிய மாணவர்களை மீளிணைத்தல் தொடர்பில் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டும்போதே இந்த விடயத்தை தெரிவித்தனர்.

“பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீளவும் தரம் 9 இல் சேர்க்கும்போது அவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரிவதில்லை. அவர்கள் அந்த வகுப்பிலே பேசாமல் இருக்கின்றனர். இவ்வாறு பல வகுப்புக்களில் நடைபெறுகின்றன” – என்று பிரதேச செயலர்கள் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவ்வாறு இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டனர். ஆரம்பக் கல்வி சரியாகப் பயிலாத மாணவர்களால் இந்த நிலைமை ஏற்படுவதாகக் குறிப்பிட்டனர். இதனைத் தீர்ப்பதற்கு பாடசாலைகளில் அவ்வாறான மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆரம்பக் கல்வி போதிக்கப்படுகின்றது. ஆனால், இது நடைமுறையில் முழுமையான சாத்தியமான விடயமல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொரோனா காரணமாக இவ்வாறு ஆரம்பக் கல்வியை முறையாகப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.