நீதிமன்றக் காவலுக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதற்கு பணம் பெற்றதாக புகார் எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தியது. குறிப்பாக சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதையடுத்து புதன்கிழமை அதிகாலை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர். மருத்துவ சான்றிதழ்களையும் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்து, அவர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும், வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அனுமதி அளித்தார்.

ஆனால், மருத்துவமனையில் ரிமாண்ட் செய்தது தவறு என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ரிமாண்டை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல’ என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.