இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி.

இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. இங்குள்ள முனா தீவில் இருந்து சுலவேசி தீவுக்கு நேற்று ஒரு படகு சென்றது. இந்த படகில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். தெற்கு சென்சாஷி பகுதியில் சென்ற போது திடீரென அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள்.

இது பற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்ததில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படகில் வந்த பலர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.