செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவில் புதிய திருப்பம்! நீதிபதி எடுத்த முடிவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கதுறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்பிறகு, இவரது வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 -ம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோர முடியாது என்றும், ஜாமின் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று பட்டியலிடப்படவில்லை. அதனால், இந்த மனுவின் விசாரணையை விரைவாக எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி அல்லியிடம் முறையிடப்பட்டது.

அப்போது நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமின் மனுதாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.