சனல் 4 வீடியோவின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாம்! – சிங்கள ஊடகத்தில் இப்படிச் செய்தி.

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிரிட்டனின் ‘சனல் 4’ ஊடகம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் பின்னணியில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டுள்ளன என்று கொழும்பின் சிங்கள ஊடகமான ‘அத’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் 275 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டவர்கள் இருந்தனர் என்று ‘சனல் 4’ வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

பல வருடங்கள் ராஜபக்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருக்கும், ஹன்சீர் அஸாத் மௌலானா என்பவர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அஸாத் மௌலானாவுக்குச் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில், அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, திட்டமிட்ட வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன எனவும் ‘அத’ பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி குறித்த காணொளி சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்புவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது சட்டத்தரணி ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த ஒளிபரப்பு பிற்போடப்பட்டது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும், சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அஸாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், மௌலானா குறிப்பிடும் காலப்பகுதியில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சேவையில் இருக்கவில்லை எனவும், இதனை சுரேஷ் சலே ஆவணங்களுடன் சனல் 4 இற்கு தெளிவுபடுத்தியுள்ளார் எனவும் குறித்த அத பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.