கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இன்று இரு பெண் போராளிகளின் எச்சங்கள் முழுமையாக மீட்பு – ஆடைகளில் இலக்கங்கள் – துப்பாக்கி ரவைகளும் சிக்கின

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தன. இன்றைய அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சை நிற முழு நீள காற்சட்டைகளிலும் இலக்கங்கள் இடப்பட்டிருந்தன. அத்தோடு அந்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்கள் இடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சை நிற நீளக் காற்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முழு நீளக் கையுடைய மேற்சட்டையும், 3174 என்ற இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சை நிற முழு நீளக் காற்சட்டையும், முழு நீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை, அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு மனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளன. அந்த இலக்கங்கள் கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

இன்று அகழ்வுப் பணி இடம்பெற்ற இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகச் செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடயப் பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.