பொலிஸ் அனுமதியின்றி பயணித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்தி! – சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் கிழக்கு ஆளுநர்.

நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

திருகோணமலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திலீபனின் நினைவேந்தல் ஊர்தி நாடாளுமன்ற உறுப்பினரால் பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்துக்குள் ஊடுருவிக் கொண்டு செல்லப்பட்டது. இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகின்றது.

தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்படக்கூடிய பொறுப்பு உள்ளது.

அப்பொறுப்பில் அவதானக் குறைவாகச் செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதுடன், சட்டம், ஒழுங்கும் பாதிப்படைகின்றது.

எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இப்படியான செயற்பாட்டைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

திருகோணமலை சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.