கஜேந்திரன் மீதான தாக்குதலைக் கண்டிப்பதற்கு முதுகெலும்பு இல்லாத கிழக்கு ஆளுநர் கோழைத்தனமாக அறிக்கை விடுகிறார்! – சபையில் வேலுகுமார் விளாசல்.

“அஹிம்சைவாதியான தியாகி திலீபனை நினைவுகூருவது சட்டவிரோதம் என்று கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த அறிவிப்பை உடன் மீளப்பெற வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் (தமிழ் முற்போக்குக் கூட்டணி) கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

“அஹிம்சை வழியில் போராடி உயிர்த் தியாகம் செய்த திலீபனை நினைவுகூர்ந்து வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது திருகோணமலையில் வைத்து மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தடுக்காமல் பொலிஸார் செயற்படும் விதத்தையும் வீடியோக்களில் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய கிழக்கு மாகாண ஆளுநர், செல்வராசா கஜேந்திரன் எம்.பியின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது எனக் கோழைத்தனமாக அறிக்கை விட்டுள்ளார். ஓர் அஹிம்சைவாதியை நினைவுகூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவிக்க அவருக்கு முதுகெலும்பில்லை. மாறாக நினைவேந்தலைச் சட்டவிரோதம் எனக் கூறி கோழைத்தனமாக அவர் அறிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஆளுநரின் செயலைக் கண்டிக்கின்றோம். அந்தக் கூற்றை அவர் உடன் மீளப்பெற வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.