காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கனடா நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நியூயார்க் நகரில், வெளியுறவுக்கான கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்தியா – கனடா பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-

கனடா பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே நாங்கள் பதிலளித்து விட்டோம். இது போன்று கொலை செய்வது இந்தியாவின் கொள்கை அல்ல. இதில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக ஏதாவது குறிப்பிட்ட சிறிய ஆதாரம் இருந்தாலும் அதை கொடுக்கலாம். அதை, இந்தியா உரிய முறையில் கவனிக்கும் என தெரிவித்துள்ளோம். எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லாமல் இது போன்ற புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில முக்கியமான அம்சங்களை பார்க்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக கனடாவில், பிரிவினைவாத அமைப்புகளால் திட்டமிட்டு குற்றங்கள், வன்முறைகள், பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக குறிப்பிட்ட தகவல்கள், ஆதாரங்கள், முன்னெச்சரிக்கைகளை கனடாவுக்கு நாங்கள் வழங்கி உள்ளோம். கனடாவில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள், அதன் தலைவர்கள் குறித்த தகவல்களையும் அளித்துள்ளோம். அவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளையும் அளித்துள்ளோம். கனடாவில் உள்ள நிலவரங்களை முழுமையாக பார்க்க வேண்டும். அங்கு சில அரசியல் நிர்ப்பந்தங்கள் உள்ளன.

பயங்கரவாத அமைப்புகள் குறித்து நாம் குறிப்பிட்டால் தங்கள் தரப்பை நியாயப்படுத்தி கனடா பேசுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது. அவர்கள் இது தொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?

Leave A Reply

Your email address will not be published.